சென்னை: தனது கோனா ரக பேட்டரி கார்களுக்கு புதிய சார்ஜிங் வசதிகளை வழங்க உள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.
மோட்டார் வாகன சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தனது கோனா ரக எஸ்.யூ.வி வகை பேட்டரி கார்களுக்கு, புதிய சார்ஜிங் வசதிகளை வழங்க உள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்த கார் உற்பத்தி நிறுவனமானது, இதற்காக நாடு முழுவதும் 11 நகரங்களில் உள்ள தனது 15 பேட்டரி வாகன டீலர்களிடம் ஏ.சி 7.2 கிலோ வாட் சார்ஜர் வசதியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக மற்ற நகரங்களிலும் விரைவில் இந்த வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிகிறது.
ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வசதியானது, பிரபல அல்லையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தில்லி, சென்னை, பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வருடம் ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட கோனா பேட்டரி கார்களுக்கு இதுவரை 302 ஆர்டர்கள் வந்துள்ளன. அதில் 231 வாகனங்கள் டெலிவரி செய்யப்பட்டு விட்டன.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து அதன் விற்பனை நிலையங்களில், கோனா பேட்டரி கார்களுக்கு சார்ஜிங் செய்யும் வசதியை உண்டாக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் அது நடைமுறைக்கு வரும் என்றும், கார்ப்பரேட் விவகாரங்களுக்கான ஹூண்டாய் நிறுவனத்தின் துணைத் தலைவர் பி.சி.தத்தா தெரிவித்தார்.
விற்பனைக்கு பிறகான சேவை வசதிகள் மூலமாகத்தான் வாடிக்கையாளர்களின் நமபிக்கையைப் பெற முடியும் என்றும், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்க உறுதி பூண்டிருப்பதாகவும், ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி எஸ்.எஸ்.கிம் தெரிவித்தார்.