மகாத்மா காந்தியின் சத்திய சோதனை
காந்தி கூறிய ஏழு சமுதாயப் பாவங்கள் எனக் குறிப்பிட்டிருந்ததை பால.குருசாமி அழகாக விளக்கி தமது நூலில் விளக்குவார். அப்போதிலிருந்தே அவ்வப்போது சத்திய சோதனையைப் பலமுறை வாசித்தபோதும் திரும்பத் திரும்ப எடுத்துப் பார்த்துக்கொள்வேன். இப்போதும் அதை வாசித்தபோது மனதை ஏதோ ஒன்று வருத்தியது. மதங்களின் மத்தியில் மக்கள் நோயினால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும்போது வேற்றுமை உருவாகிக் கொண்டிருக்கிறது. தன்னையே வருத்தி அவர் உண்ணாவிரதம் இருந்தது வீணா!
இத்தனை வருடங்களாகியும் இந்த மனிதர்களிடம் சாதி,மதத்துவேஷம் போகாமல் இருக்கிறார்களே என்ற வேதனை மேலோங்கியது. ஒற்றுமையினால் ஆங்கிலேயனைத் துரத்திய இந்தியர்களுக்கு அன்று மோடி சீன அதிபருக்கு வரவேற்பு அளித்தது தவறோ! என ஏன் இப்போது கேட்கத் தோன்றவில்லை! இதை ஏன் பத்திரிகைகள் எழுதுவது இல்லை எனப் புரியவில்லை.
ஆட்சிக்கு வருபவர்கள் வெளிநாடுகளில் இருப்பவரைப்போன்று மாறி சர்வாதிகாரியாக மாறிவிட்டார்களா என்ன! அப்ப எதற்கு நாம் காந்தி, காமராசர், கக்கன், திருவள்ளுவர் எனப் படிக்கவேண்டும்.. நீதி தவறியதால் கடல் அழித்ததாக மணிமேகலை பேசும் தமிழ் இலக்கியத்தில் படிக்க மட்டும்தானா! எனக் கடவுள் நினைத்தால் மக்களின் கதி என்ன? என்பதை நாட்டின் தலைமைப் பொறுப்பாளர்கள் இனியாவது சிந்திப்பார்களா..
கை தட்டவும், விளக்கேற்றவும் பேச வாய்ப்பளிக்கும் அரசு மக்களுக்கு ஏன் நல்ல மருத்துவம், நல்ல கல்வி இலவசமாக அளிக்காமலே இருக்கிறது..
தமது வீட்டுப் பணத்தை நாட்டிற்காக செலவிட்டவர் வரலாறுகளை மட்டும் படித்தால் போதுமா? ஒரு ஊர்த்தலைவர் பதவிக்கே இலட்சக்கணக்கில் இலஞ்சம் வாங்குபவர்களிடம் இப்போது மக்களுக்காகச் செலவிட பணம் இல்லையா? வெட்கித் தலைகுனியாமல் இன்னமும் என்ன நடக்குமோ என்ற பயத்தில் உலகத்தில் எந்த மூலையில் இடம் கிடைக்கும் என இன்னமும் தேடி அலுத்துவிட்டார்களா என்பது கடவுளுக்கு மட்டும்தான் தெரியும்.
இந்த புத்தகத்தைப் படித்தபோது சிறைச்சாலையில் காந்தி ஏன் நமக்காக இவ்வளவு கஷ்டப்படவேண்டும், அவருக்காக நாம் இனி என்ன செய்யவேண்டும் என்றே தோன்றியது.
தொல்பொருள் ஆய்வுகளின்படி ராமர்கோவில்தான் அந்த இடத்தில் இருந்தது என்றாலும் இருக்கும் கோவிலை இடிக்கலாமா? அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு இடத்திலும் தோண்டினாலும் ஒவ்வொருமாதிரி இருக்கும். அப்படி எல்லாம் செய்ய முடியுமா? எல்லா மதத்தினருக்கும் மரியாதை தருவதைத்தான் காந்தி போதித்தார்.
ஆசிபா பெண்ணிற்கு இன்னமும் விடிவு கிடைக்கவில்லை. பொள்ளாச்சி கேசும் அப்படித்தான். பிணத்தை விற்பதாக கேஸ் பத்திரிகையில் முன்னர் வந்திருந்தது. இன்று பிணங்கள் நிறைய விழுகின்றது. எடுப்பார்களா?
மக்களை வாழ வைப்பவன்தான் கடவுளின் மடியில் இடம் பிடிப்பான்.
- பி.ஆர். லக்ஷ்மி