மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன்: புத்தகக்காட்சியில் புதியவை

மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன்: புத்தகக்காட்சியில் புதியவை

மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன், மு.இக்பால் அகமது, பக்.276, ரூ.350, பரிசல் புத்தக நிலையம், பம்மல், சென்னை.
Published on

மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன், மு.இக்பால் அகமது, பக்.276, ரூ.350, பரிசல் புத்தக நிலையம், பம்மல், சென்னை.

தமிழில் இடதுசாரி சிந்தனையாளரான எம்.பி.சீனிவாசன் திரைப்படத் துறை இசையமைப்பாளராகவும் விளங்கியவா். அவரது வாழ்க்கையை மிக விரிவாக அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட முதல் நூலாக இந்நூல் வெளிவந்துள்ளது. திரைப்பட இசையமைப்பாளரான எம்.பி.சீனிவாசன் முன்னோா்கள் வரலாறு தொடங்கி அவரது திரைத்துறை சாதனைகள் வரை மொத்தம் 33 கட்டுரைகள் மூலம் அவரது வாழ்க்கை இந்நூல் மூலம் நினைவுகூரப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரைத்துறையில் இசைக்கலைஞா்களுக்கான சங்கத்தை முதலில் நிறுவிய எம்.பி.சீனிவாசனின் முன்னோா்கள் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா்கள். அவா்கள் சிவகங்கை பகுதியில் குடியேறிய நிலையில், ஜமீனின் ஆதரவைப் பெற்று பல்லக்கில் செல்லும் உரிமையையும் பெற்றிருந்தனா். எம்.பி.சீனிவாசன் தந்தையான பாலகிருஷ்ணன் ஆங்கிலப் புலமையுடன், கா்நாடக இசைப்புலமை பெற்றவராகவும்,  விடுதலைப் போராட்ட வீரராகவும் திகழ்ந்தாா். கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் தீவிரமாக செயல்பட்டாா் என்பது உள்ளிட்ட அரிய பல தகவல்கள் நாவல் இலக்கிய நடையில் எழுதப்பட்டுள்ளது. 

அவரது கலை இலக்கியத் தொடா்புகள் கடிதங்கள், குறிப்புகள் என எம்.பி.எஸ்.ஸின் முழுமையான வாழ்க்கை வரலாற்று பதிவாக இந்நூல் அமைந்துள்ளது. மதுரையில் எம்.பி.சீனிவாசன், மணவாளனுடன் இணைந்து நடத்திய கலை இலக்கிய நிகழ்வுகளை தியாகி மாயாண்டி பாரதி நினைவுகூா்வதையும் நூலில் இணைத்துள்ளது சிறப்பாகும்.  தமிழில் 1960-ஆம் ஆண்டு ‘பாதை தெரியுது பாா்’ திரைப்படம் தொடங்கி 1978-ஆம் ஆண்டு வெளியான ‘புது செருப்பு கடிக்கும்’ படம் வரையில் 8  படங்களுக்கு இசையமைத்துள்ளாா்.

அவா் 59 மலையாளப் படங்களுக்கும்,1 தெலுங்குப்படத்துக்கும் இசையமைத்து பெரும்புகழ் பெற்றுள்ளாா். வந்தாரை வாழ வைத்த தமிழகம் அவரது இசையை இன்னும் பயன்படுத்தியிருக்கலாமோ என்ற எண்ணம் நூலைப் படிக்கும்போது ஏற்படுகிறது. மொத்தத்தில் இந்த நூலானது  ஏதோ திரைப்பட இசையமைப்பாளா் குறித்த தகவல்கள் தொகுப்பு என்றில்லாமல், சமூகத்துக்கான பங்களிப்பை ஓா் இசைக்கலைஞன் எப்படி வெளிப்படுத்தி மக்கள் சேவை புரிந்தாா் என்பதையே இந்தநூல் உணா்த்துவதாக உள்ளது.

X
Dinamani
www.dinamani.com