அனைத்து துறையினரின் எதிர்பார்ப்புகளுக்கிடையே அதிகாரமிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்.20) நடைபெறுகிறது. இதில், மோட்டார் வாகனம், எஃப்எம்சிஜி, ஹோட்டல் உள்ளிட்ட துறையினரின் வரி குறைப்பு கோரிக்கைகள் பரிசீலிக்கப்படவுள்ளன.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 37-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கோவாவில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிய ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக சரிந்துள்ளதன் பின்னணியில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
எனவே, மந்த நிலை கண்டுள்ள பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், அதேநேரம், வருவாய் நிலையை கருத்தில் கொண்டும் சரக்கு மற்றும் சேவை வரிகளை சீரமைப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.