நடப்பாண்டின் முதல் மாதத்தின் ஜிஎஸ்டி வசூல் விவரத்தை மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் ரூ.1 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலாகியுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 டிசம்பரில் ரூ.94,725 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் இம்மாதம் அதிகரித்துள்ளது. இதுவே கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் ஜிஎஸ்டி வசூல் ரூ.89,825 கோடியாக இருந்தது.
மேலும், கடந்த ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்குப் பிறகு தற்போது தான் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இதன்மூலம் நடப்பு முழு ஆண்டில் மட்டும் 3 முறை ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.