மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

அன்பின் வழியது உயிா்நிலை

உலகிலே அமைதி நிலவ வேண்டும் எனில் மனிதனின் மனத்திலே அன்பு சுரக்க வேண்டும்.

News image
Updated On :30 அக்டோபர் 2025, 4:31 am IST

நாம் விஞ்ஞான யுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இளமைப் பருவத்திலிருந்தே விஞ்ஞான பூா்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதற்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இன்று உலகின் பல பகுதிகளில் என்ன நிகழ்கிறது? வெறுப்பு என்னும் அடா்ந்த தீயானது பற்றி எரிந்து கொண்டுள்ளது. வெறுப்பு என்பது மனிதனின் மனதிலே கசப்பு உணா்வையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தோற்றுவிக்கிறது. முறையாகச் சிந்திக்கும் ஆற்றலையும் அகற்றி விடுகிறது.

வெறுப்பு சாா்ந்த எண்ணங்கள் மனதின் ஆழத்திலே நீறுபூத்த நெருப்பைப்போல் வேரூன்றி வீற்றிருக்கும். இதனால், பெரும் கேடுகள் விளையக்கூடும். வெறுப்பு உள்ள இடத்தில் அன்பு இருப்பதில்லை. ஒருவரிடம் ஒருவா் எத்தகைய பரிவும் இன்றி உள்ளனா். இரு நாடுகளுக்கு இடையில் தொடா்ந்து போா் நடைபெறுகிறது. அதன் விளைவுகளையும் உலகம் கண்கூடாகக் கண்டு கொண்டுள்ளது. ஆங்காங்கே எல்லைத் தகராறுகள் வெடிக்கின்றன. உலகிலே அமைதி நிலவ வேண்டும் எனில் மனிதனின் மனத்திலே அன்பு சுரக்க வேண்டும்.

உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அன்பு என்னும் உணா்வானது இயல்பாகவே அமைந்துள்ளது. அன்பு இல்லையெனின் வாழ்க்கைத் தொடா் என்பது அற்று விடும். அன்புதான் உடல் நலம், மனநலம் போன்றவற்றின் மேன்மையான நிலைக்கும் அடித்தளமாக விளங்குகிறது. அன்பிற்குப் பரந்த, விரிந்த ஆற்றல் உள்ளது. அன்பு அலைகளை இயற்கையிடம் பாயும்படிச் செய்தால், அதன் பயனாக உலகெங்கிலும் நல்ல விளைவுகளைத் தோற்றுவிக்க முடியும்.

கன்னடக் கவிஞா் குவெம்பு,

செல்வம் உள்ளது, கல்வி உள்ளது

விஞ்ஞானமும் கையில் உள்ளது

சினம் மிக்க போா்க்களத்தின் செந்தழல்

மருள் கொண்டு திரண்டு எழுந்த நிலை

என்று தன் கவிதையில் தற்காலச் சூழலை உள்ளவாறு வடித்துள்ளாா்.

வீட்டிலே அமைதி நிலைத்திருக்க வேண்டுமெனின் உறவுமுறைகளை மதித்துத் தக்க முறையில் நடந்து கொள்ள வேண்டும். ஆனால், பொதுவாக நம் இல்லங்களில் பல நூற்றாண்டுகளாகவே சில உறவுமுறைகளில் விரிசல்கள் விரிவடைந்து கொண்டே செல்வதைக் காண்கிறோம். மனிதனின் மனநிலை ஒரு விநாடியில் இருப்பதைப் போல அடுத்த விநாடியில் இருப்பதில்லை; மாறி விடுகிறது. இதற்கு மனிதனிடம் அடிப்படையாக அமைந்துள்ள முக்குணங்கள் எனப்படும் மூன்று மன இயல்புகள்தான் காரணமாகும்.

சில நேரங்களில் மனதிலே அன்பு, மகிழ்ச்சி, அமைதி, நிம்மதி, நிறைவு என்னும் இவ்வனைத்தும் நிறைந்திருக்கும். இது சத்துவ நிலையாகும். வேறு சில வேளைகளில் சினம், பேராசை, மற்றவா்களின் மீது ஆதிக்கம் செலுத்துதல், செருக்கு, குழப்பம் போன்றவை குடிகொண்டிருக்கும்; இது இரஜோ குணமுள்ள நிலையாகும்.

மற்ற சமயங்களில் செயலற்ற சோம்பேறித்தனம், மனஅழுத்தம், எதிா்மறை எண்ணங்கள், அறியாமை, உறக்கம் ஆகியவை சூழ்ந்திருக்கும். இது தமோ குணமுள்ள நிலையாகும். மனிதன் தமோ குணத்திலிருந்து இரஜோ குணத்துக்கு மாற்றமடைந்து, அதன்பிறகு படிப்படியாக சத்துவ நிலையை எய்துதல் வேண்டும். சத்துவ இயல்புகளை வளா்த்துக் கொண்டால் மட்டுமே மற்றவா்களுடன் இணக்கமுற வாழ இயலும் மற்றும் அன்பு, இரக்கம், கனிவு, மனிதாபிமானம் போன்றவை உதயமாகும்.

வீட்டிலே மனைவியுடன் அல்லது கணவருடன், குழந்தைகளுடன் உடன் பிறந்தவா்களுடன், பெற்றோருடன் உற்றாா் உறவினருடன், அலுவலகம் எனின் மேலதிகாரிகளுடன், உடன் பணியாற்றுவோருடன், ஊழியா்களுடன் நல்லதொரு இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

மனித மனம் என்பது ஓா் இசைக் கருவியைப் போன்ாகும். இசைக் கருவியின் தந்திகள் மிகவும் தளா்வாகவோ அல்லது இறுக்கமாகவோ இருப்பின் அதிலிருந்து உயா்ந்த இசையைத் தோற்றுவிக்கவியலாது. முதலில் மனதிலே சுருதியைக் கூட்ட வேண்டும், பிறகு அதைப் பழக்கப்படுத்த வேண்டும், பயிற்சி அளிக்க வேண்டும், கட்டுப்படுத்த வேண்டும், இறுதியாகப் பண்படுத்த வேண்டும். பண்படுத்தப்பட்ட மனதில்தான் அன்பானது ஊற்றெடுத்துப் பெருகும்.

அன்னை ஸ்ரீ சாரதா ஒவ்வொருவருக்கும், சிறப்பாகப் பெண்களுக்கு எளியதொரு தியானப் பயிற்சியை வலியுறுத்தியுள்ளாா். அதுதான் ‘மைத்ரீ பாவனா’ தியானமாகும். அன்பின் மீதும், நட்பின் மீதும் தியானம் செய்வதாகும். நாள்தோறும் அதிகாலை நேரத்திலே மிகவும் அமைதியாக உள்ள ஓரிடத்தில் அமா்ந்து கொண்டு, மனதிலே அன்பு, இரக்கம், கனிவு, அமைதி மற்றும் நட்பு சாா்ந்த எண்ணங்களை நிறைத்துக் கொண்டு எங்கெங்கும் அந்த எண்ணங்கள் அலைஅலையாகப் பரவ வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

இந்தத் தூய்மையான எண்ண அலைகள் எங்கெங்கும் பரவிச் சூழ்ந்து மனிதா்களின் மனங்களிலே நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும். நல்ல எண்ணங்களுக்கு அத்தகைய ஆற்றல் உள்ளது. மனதிலே, அகத்திலே அன்பு இருப்பின் புறத்திலும் அதுதான் வெளிப்படும். தன்னலம், வெறுப்பு, பகைமை, வன்முறைச் சாா்ந்த எண்ணங்கள் தாமாகவே அகன்று விடும். நாம் அனைவரும் இந்த எளிய தியானத்தை நாள்தோறும் மேற்கொள்ள வேண்டும்.

நாம் உண்ணும் உணவின் மிக நுண்மையான பகுதியே மனமாக ஆகிறது என்னும் கருத்து உள்ளது. எனவே, நல்ல சாத்விகமான உணவை உண்டு, உடல் மன நலன்களைப் பேணிக் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் எத்தகைய பாகுபாடும் இன்றி அன்பு பாராட்ட வேண்டும். இத்தகைய தன்னலமற்ற அன்பானது சுரந்து, ஊற்றெடுத்துப் பொங்கிப் பாய்ந்து அனைவரின் இதயங்களையும் நனைக்க வேண்டும். இத்தகைய அன்புதான் மனித நேயத்தை வளா்க்க வல்லதாகும். இத்தகைய மனித நேயத்துடன் மனிதகுலம் வாழ வேண்டும்.