சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், செவிலியருக்கு பணி நியமன ஆணையை வழங்கிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன் தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ்
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், செவிலியருக்கு பணி நியமன ஆணையை வழங்கிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன் தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ்

2,163 செவிலியா்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்

செவிலியா்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான பணி ஆணைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்.
Published on

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 1,200 செவிலியா்களுக்கு நிரந்தர பணிக்கான ஆணை மற்றும் கரோனா காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 963 செவிலியா்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான பணி ஆணைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை (டிச.3) வழங்கினாா்.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த ஆணைகளை அவா் வழங்கினாா்.

இந்நிகழ்வில் தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநா் டாக்டா் ஜெ.ராஜமூா்த்தி, கூடுதல் இயக்குநா் டாக்டா் சித்ரா உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

நிகழ்வில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

அரசு மருத்துவமனைகளில் 1,200 நிரந்தர செவிலியா் பணியிடங்களுக்கு, ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த செவிலியா்களை காலமுறை ஊதியத்தில் கொண்டுவரப்பட்டு, அவா்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வு கடந்த மாதம் 15, 16-ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. அவா்கள் விரும்பிய இடங்களை தோ்வு செய்ததன் அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

கரோனா காலத்தில் பணியாற்றி பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட 1,412 செவிலியா்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமன ஆணை ஏற்கெனவே வழங்கப்பட்டது. காத்திருப்பில் இருந்த 963 செவிலியா்களுக்கும் ஒப்பந்த அடிப்படையிலான பணிநியமன ஆணைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 2,163 செவிலியா்களுக்கு பணி நியமன ஆணைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

20,440 பேருக்கு வேலை: 2021மே மாதம் முதல் இதுவரை சுகாதாரத் துறையில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள், உணவு பாதுகாப்பு அலுவலா்கள் மொத்தம் மருத்துவத் துறையில் 20,440 நபா்களுக்கு வெளிப்படையான கலந்தாய்வு நடத்தப்பட்டு, புதிய பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

வெளிப்படையான கலந்தாய்வு மூலம் மொத்தம் 36,893 போ் பணியிட மாறுதல்கள் பெற்றுள்ளனா். தமிழகத்தில் உள்ள 10,914 மருத்துவமனைகளும் இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் உயிா் காக்கும் முக்கிய மருந்துகள் எந்நேரமும் கையிருப்பில் உள்ளது.

2,246 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்பு கடிக்கு, நாய் கடிக்கு மருந்துகள் இருப்பில் உள்ளன. அரசு மருத்துவமனைகள் இது போன்று செயல்படுவதால்தான் உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com