பாகுபலி படத்தில் குணச்சித்திர வேடங்களில் தமிழ் நடிகர்களை பயன்படுத்தியது குறித்து நடிகர் சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் மறைமுகமாக வெளிப்படுத்திய கருத்துக்கு இயக்குநர் ராஜமெளலி பதிலளித்துள்ளார்.
ராஜமௌலியின் பாகுபலி படத்துக்கு நான் ஆதரவு தர மாட்டேன். ஜெகபதி பாபு, சுமன், சாய்குமார் போன்ற நடிகர்கள் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடிக்க திறமை மிக்கவர்கள் என கருதவில்லை என நடிகர் சுரேஷ் சில வாரங்களுக்கு முன்பு ட்வீட் செய்திருந்தார். இதனால் பலத்த சர்ச்சை எழுந்தது.
பாகுபலி படத்தில் சத்யராஜ், நாசர் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இதனால் தமிழ் நடிகர்களுக்கு எதிராக சுரேஷ் கருத்து தெரிவித்துள்ளார் என சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தார்கள்.
இந்நிலையில் இதுதொடர்பாக பாகுபலி இயக்குநர் ராஜமெளலி ஒரு பேட்டியில் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
போஜ்புரி நடிகர்கள், ஹிந்தி நடிகர்கள், தமிழ் நடிகர்கள் என பலரும் என் படத்தில் பணியாற்றி இருக்கிறார்கள். எனவே மற்ற மொழி நடிகர்கள் என் படத்தில் நடிப்பது இது முதல் முறையல்ல. எப்போதும் என் படத்தில் நடிக்கும் நடிகர்களின் மொழியைப் பற்றி நான் யோசித்தது இல்லை. கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிகரா என்று மட்டும்தான் பார்ப்பேன். நடிகர்களை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிரிக்கத் தெரியாது. இதைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலை கிடையாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.