'நவரசா' ஆந்தாலஜியில் நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். இதில் கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், ப்ரியதர்ஷன், கார்த்திக் நரேன், அரவிந்த் சுவாமி, கார்த்திக் சுப்புராஜ், சர்ஜுன், ரதீந்திரன் பிரசாத், வஸந்த் சாய் ஆகியோர் இயக்குநர்களாகப் பணிபுரிந்துள்ளனர்.
சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், அதர்வா, அஞ்சலி, டெல்லி கணேஷ், அதிதி பாலன், பார்வதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதில் நடிகர் யோகி பாபு ஒரு பாகத்தில் நடிக்கிறார். உணர்ச்சிகரமான காட்சியில் நகைச்சுவையை வெளிப்படுத்தும் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டவர் நாகேஷ் மற்றும் கவுண்டமணியைப் போல் நடிக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். நகைச்சுவை நடிகனாக மட்டும் அல்லாமல் பல்வேறு குணங்களையும் வெளிப்படுத்தும் கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை என்றவர் " கவுண்டமணி நடிப்பில் வெளிவந்த ' ஒன்னா இருக்க கத்துக்கணும் ' நாகேஷ் நடித்த ' சர்வர் சுந்தரம் ' , ' நீர் குமிழி ' போன்ற படங்களில் நகைச்சுவையைத் தாண்டி நிறைய உணர்வுகளை இருவரும் வெளிப்படுத்தியிருப்பார்கள் என்றும் நவரசா வெளியான பின் எனக்கான கதாப்பாத்திரங்கள் தேடிவரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது " எனத் தெரிவித்தார் .
ஆகஸ்ட் 6 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் வெளியாகும் இந்த படங்கள் கரோனாவால் பாதிக்கப்பட்ட திரைக்கலைஞர்களின் நலனுக்காக எடுக்கப்படுகிறது என்பதால் இதில் நடித்தவர்கள் யாரும் சம்பளம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.