‘கோப்ரா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் விக்ரம் கலகலப்பாக பேசியுள்ளார்.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் கோப்ரா படதை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து. கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கே.எஸ். ரவிகுமார், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி, மீனாட்சி போன்றோர் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், தயாரிப்பு - எஸ்.எஸ். லலித் குமார்.
இந்நிலையில் கோப்ரா படம் ஆகஸ்ட் 11 அன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
மேடைக்கு வந்த விக்ரம் எதுவும் பேசாமல் நெஞ்சின் மீது கை வைத்துக் கொண்டார். பிறகு கையை எடுத்து விட்டு, “மறந்துட்டேன். இங்க கையை வைத்தால் நெஞ்சுவலினு சொல்லிடுவாங்களே” என்றார். அரங்கம் ஆர்ப்பரித்தது. இன்று சென்னையில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் பேசியதாவது:
ஏஆர் ரஹ்மானின் நான் மிகப் பெரிய ரசிகன். எனது மகன் துருவ்வும் அவரது ரசிகன். ஆனால் அவரை விட நான்தான் பெரியவன் என்ற முறையில் நானே பெரிய ரசிகன். நம் மீது நாமே நம்பிக்கை வைத்து கடுமையாக வேலை செய்தால் எவ்வளவு உயரத்திற்கு வேண்டுமானாலும் போகலாம். இதற்கு சிறந்த உதாரணம் ரஹ்மான்தான். அவரைப் பார்த்த பிறகுதான் எனக்கு தேசிய விருது ஆஸ்கர் விருது எல்லாம் வாங்க வேண்டுமெனத் தோன்றியது. இப்படத்திற்காக 7 மொழிகளில் டப்பிங் செய்திருக்கிறேன். எல்லாம் இயக்குநர் அஜய் கொடுத்த தைரியம்தான்.
துருவ்வின் நடிப்பிற்கு அவரது அப்பாவான எனக்கு பெருமையாக இருக்கிறது. இவ்விழாவிற்கு வந்த துருவ்விற்கு நன்றி.