

திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்தமைக்காக நடிகர்கள் ரஜினிகாந்தும் நந்தமுரி பாலகிருஷ்ணாவும் சர்வதேச திரைப்படத் திருவிழாவில்(ஐ.எஃப்.எஃப்.ஐ.) கௌரவிக்கப்பட உள்ளனர்.
இது குறித்து, மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்திருப்பதாவது; “பழம்பெரும் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா ஆகியோர் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்தமைக்காக, அன்னார்களது பரந்தளவிலான மக்களிடையேயான செல்வாக்கு, உழைப்பு, கடந்த பல ஆண்டுகளாக இந்திய சினிமாவுக்கான அவர்களின் பங்களிப்பு ஆகியவற்றுக்காக கௌரவிக்கப்படவுள்ளனர். அவர்கள், இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா(ஐ.எஃப்.எஃப்.ஐ.) நிறைவு நாளன்று கௌரவிக்கப்படுவார்கள்” என்றார்.
சர்வதேச திரைப்படத் திருவிழா(ஐ.எஃப்.எஃப்.ஐ.) இம்மாதம் 20-ஆம் தேதி தொடங்கி நவ. 28-இல் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. கோவாவிலுள்ள டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி திடலில் நிறைவு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் மொத்தம் 84 உலக நடுகளிலிருந்து 270 திரைப்படங்கள் ஒளிபரப்பட உள்ளன.
‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான ரஜினிகாந்தின் சாதனைகள் பட்டியலுக்கு அப்பாற்பட்டவை. அதேபோல, தெலுங்கில் இன்றளவும் முன்னணி நடிகராக வலம் வரும் நந்தமுரி பாலகிருஷ்ணா(பாலய்யா) நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஆந்திர பிரதேசத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து எம்எல்ஏவாகத் தேர்வாகியுள்ள பாலகிருஷ்ணா ஆந்திரத்தில் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வருகை தந்தவர்களில் குறிப்பிடத்தக்கவராவார். அவர் நடித்த ‘சமரசிம்மா ரெட்டி’, ‘சிம்ஹா, ஆதித்யா 369’, ‘முதுல்லா மாவய்யா’ ஆகியவை ரசிகர்களின் விருப்பத் தேர்வாக இன்றளவும் உள்ளவையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.