‘குரு’ திரைப்படத்தில் மையா மையா பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடிய பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்தை தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.
சமீபத்தில் ஒரு பிரபல ஆங்கில பத்திரிகை கான்ஸ் திரைப்பட விழா முடிந்த கையோடு மல்லிகா ஷெராவத் தம் காதலர் சிறில் ஆக்ஸன்ஃபன்ஸை ரகசிய திருமணம் செய்தார் என்ற தகவலை வெளியிட்டது. அவர் இனி சினிமாவில் நடிக்க மாட்டார், இந்தியாவுக்கும் திரும்பி வர மாட்டார் என்றும் அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது.
ஆம்ஸ்டர்டாமில் தங்கியுள்ள மல்லிகா அச்செய்தியைப் படித்து வருத்தம் அடைந்தார். அதற்கு பதிலடியாக தன் டிவிட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது, ‘என் திருமணம் பற்றிய தகவல்கள் அனைத்தும் பொய். இந்தியா திரும்ப மாட்டேன், சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று நான் கூறியதாக சொல்லப்பட்ட அவதூறுச் செய்திகளை நம்ப வேண்டாம். அவற்றில் துளியும் உண்மையில்லை’ என்றார்.
இதற்கு சில நாட்கள் முன்புதான் அவர் சமூக வலைத்தளங்களில் தம் காதலர் சிறிலுடன் சில புகைப்படங்களை வெளியிட்டு, 'காதலில் வீழ்வது போல அற்புதமான விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது. அதுவும் நீங்கள் நேசித்தவரும் உங்களை அதே போல் நேசிக்கும் போது’ என்று உருக்கமாக டீவிட் செய்துள்ளார். அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் ரசிகர்கள் ரீ டீவிட் செய்து மகிழ்ந்தனர்.
சிறில் பாரீஸ் நகரின் பிரபல ரியல் எஸ்டேட் வியாபாரி. இருவருக்கும் பொதுவான ஒரு நண்பரின் மூலம் மல்லிகா ஷெராவத்தின் அறிமுகம் சிறிலுக்கு ஏற்பட்டது. சந்தித்த சில நாட்களில் இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்ல ஆரம்பித்தனர். மல்லிகாவுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றினை காதலர் தின சிறப்பு பரிசாக அளித்துள்ளார் சிறில்.
மல்லிகா பாரிஸில் ஒரு டச் கம்பெனியுடன் இணைந்து ஆள் கடத்தல் (Human trafficking) எதிர்த்து செயல்பட்டு வருகிறார். ஒரு பக்கம் காதல் வாழ்க்கை, மறுபக்கம் சமூக அக்கறை என்று சுமுகமாகப் போய்க் கொண்டிருந்த அவர் வாழ்க்கையில் திடீர் திருப்பமாக அவர் வசித்த அப்பார்ட்மெண்டில் திருடர்கள் புகுந்து கொள்ளை அடித்த விஷயம் பரபரப்பானது. அதையும் அவர் ட்விட்டரில் பீதியுடன் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் கான் திரைப்பட விழாவில் பங்கேற்ற மல்லிகா சிறில் காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டார்கள் என்ற செய்தியை ஆங்கில நாளேடு வெளியிட்டு அது சமூக வலைத்தளங்களில் சுற்றி வந்தது. வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக மல்லிகா தன் திருமணத் தேதி முடிவானால் நிச்சயம் பகிர்ந்து கொள்வதாக டீவிட் செய்துள்ளார். மல்லிகா ஷெராவத்தின் வயது 48, அவர் ஏற்கனவே திருமணம் ஆகி மண முறிவு பெற்றவர்.
பிரபலங்கள் என்றால் பரபரப்பு தானே! அதுவும் ஹாட் ஸ்டாராக இருந்தால் இது போன்ற செய்திகளை தவிர்க்க முடியாது என்றும் இந்திய மீடியாக்கள் இப்போதெல்லாம் சரியான செய்திகளைத் தருவதை விட மசாலா செய்திகளுக்கே முக்கியத்துவம் தருகின்றனர், புறக்கணித்து விடுங்கள் என்று டிவீட் செய்கிறார்கள் மல்லிகாவின் ரசிகர்கள்.