பழம்பெரும் நடிகர் கே.என்.காளை (84) உடல் நலக்குறைவால் சனிக்கிழமை (அக். 1) நள்ளிரவு சென்னையில் காலமானார்.
கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த காளைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. நாடகத் துறையில் இருந்து திரைப்படத்துறைக்கு வந்த இவர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., கருணாநிதி உள்ளிட்டவர்களுடன் இணைந்து பல நாடகங்களில் பணியாற்றியுள்ளார்.
அதோடு, கே.வி.நாடக சபா என்ற பேரில் நாடகக் குழுவையும் நடத்தி வந்தார். மறைந்த மூத்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்பட பல கலைஞர்கள் இவரது நாடகக்குழுவில் பணியாற்றியுள்ளனர். மேலும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ள கே.என்.காளை, 100-க்கும் அதிகமான திரைப்படங்களில், குணச்சித்திரம், நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கடந்த மாதம் வெளிவந்த சசிக்குமாரின் "கிடாரி' இவர் நடித்த கடைசி திரைப்படமாகும்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் செயலாளர், செயற்குழு உறுப்பினர், துணைத்தலைவர் உள்பட பல பொறுப்புகளையும் வகித்துள்ள காளை, தன் கலைச்சேவைக்காக தமிழக அரசின் கலைமாமணி உள்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள இல்லத்தில் நடிகர் காளையின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இறுதிச் சடங்குகள் திருவல்லிக்கேணி டி.ஜி.பி அலுவலகம் பின்புறம் உள்ள மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
நடிகர் சரத்குமார் இரங்கல்: கே.என். காளை மறைவுக்கு நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:
மூத்த நடிகரும், நடிகர் சங்க முன்னாள் துணைத் தலைவருமான கே.என்.காளை மாரடைப்பால் இறந்துவிட்டார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
தமிழக அரசின் கலைமாமணி விருது, மலேசிய நாடக காவலர் விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர் காளை. அவரது மரணம் கலையுலகிற்கு பெரும் இழப்பு என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.