திரைப்பட பாடலாசிரியர் அண்ணாமலை (47) உடல்நலக் குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை (செப்.27) காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் பூர்வீகமாக கொண்ட அண்ணாமலை, பத்திரிகையாளராக தமது பணியைத் தொடங்கினார். விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்த அண்ணாமலை, நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த வேட்டைக்காரன் திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார்.
இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி இசையமைப்பில் வெளிவந்த "உன் உச்சி மண்டையிலே கிர்ர்ங்குது...' என்ற அறிமுகப் பாடலிலேயே தமிழ் திரையுலகில் பிரபலமானார். இதைத் தொடர்ந்து ஹரிதாஸ், நான் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் 100-க்கும் அதிகமான பாடல்களை அவர் எழுதியுள்ளார். கவிஞர் அண்ணாமலைக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனர். சென்னை சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையில் (ஐஓபி வங்கி எதிரில்) உள்ள அவரது இல்லத்தில், உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு புதன்கிழமை (செப்.28) நடைபெறுகிறது.