இன்றைக்கெல்லாம் ஒரு படத்தை அதன் நடிகர்களும் இயக்குநரும் தான் மெனக்கெட்டு விளம்பரம் செய்கிறார்கள். நடிகைகள் பாடல் வெளியீட்டு விழாவுக்குக் கூட வருவதில்லை.
இவர்களெல்லாம் ஏ.ஆர். ரஹ்மானைப் பார்த்துக் கற்றுக்கொள்ளவேண்டும். பல பிரச்னைகளுக்கு நடுவே கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா. இன்னும் கெட்ட நேரமாக, வெளியாகும் சமயத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பயங்கர தட்டுப்பாடு. இந்தச் சமயத்தில் படத்தை வெளியிடுவது தவறு என்கிற ஆலோசனைகளைத் தாண்டி படம் வெளியானது.
இதனால், தன்னால் ஆன உதவியைச் செய்யவேண்டும் என்று முடிவெடுத்த ஏ.ஆர். ரஹ்மான், நேற்று சென்னை சத்யம் திரையரங்குக்கு வந்தார். மாலைக் காட்சியைப் பார்த்த அவர், ரசிகர்களுடன் இணைந்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார். எதிர்பாராதவிதமாக ரஹ்மானைக் கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து ஆரவாரம் செய்தார்கள். ரஹ்மானின் வரவால் படத்துக்கு மேலும் நல்ல விளம்பரம் கிடைத்துள்ளது.