தான் இயக்கி வெளியாகவுள்ள 'மாவீரன் கிட்டு' படத்துக்காக தனக்கு தேசிய விருது கிடைக்கும் என நம்புவதாக இயக்குநர் சுசீந்திரன் குறிப்பிட்டார்.
விஷ்ணு விஷால், பார்த்திபன்ஸ்ரீ, திவ்யா, சூரி, ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலரது நடிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'மாவீரன் கிட்டு'. இமான் இசையமைத்திருக்கும் இந்தப்படத்திற்கு காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்து இருக்கிறார். இந்தபபடத்தை சந்திரசாமி, தாய் சரவணன் மற்றும் ராஜீவன் மூவரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியீட்டு விழா லயோலா கல்லூரியில் நேற்று நடைபெற்றது. பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சமுத்திரகனி வெளியிட, டீஸரை இயக்குநர் ரஞ்சித் வெளியிட்டார்.
இவ்விழாவில் சுசீந்திரன் பேசியது, "நான் இதற்கு முன்பு இயக்கி தயாரித்த 2 திரைப்படங்களின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர்களை இங்கு தான் வெளியிட்டேன். அதை தொடர்ந்து இப்போது மீண்டும் நான் தயாரித்து இயக்கியுள்ள 'மாவீரன் கிட்டு' படத்தின் டீஸரையும் இங்கு வைத்து வெளியிடுகிறேன்.
முதலில் என்னுடைய தந்தைக்கு நன்றி கூற வேண்டும் ஏனென்றால் அவர் மூலமாக தான் இப்படத்தின் தயாரிப்பாளர் சந்திரசாமி எனக்கு நண்பரானார். 'அழகர்சாமியின் குதிரை' படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது. அதே போல் 'மாவீரன் கிட்டு' படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.