கொச்சியில் உள்ள தனது வீட்டில் யானைத் தந்தம் வைத்திருந்ததாக பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மீது 2011-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மோகன்லாலுடன் மேலும் இருவரும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டார்கள்.
ஆனால், தந்தங்களை விலைக்கு வாங்கியதாக விளக்கம் அளித்தார் மோகன்லால். அப்போது கேரள முதல்வராக இருந்த உம்மன் சாண்டி, அப்போதைய வனத்துறை அமைச்சராக இருந்த ராதாகிருஷ்ணனிடம் இந்த வழக்கு குறித்து விசாரிக்க ஆணையிட்டார். சட்டப்படி, முறையான அனுமதியின்றி யானைத் தந்தங்களை வைத்திருப்பது குற்றச் செயலாகும். ஆனால், மோகன்லால் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் பால் ஜோஸ் என்கிறவர், கேரள நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து மோகன்லால் மீது மீண்டும் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அப்போது வனத்துறை அமைச்சராக இருந்த ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட மேலும் சிலர்மீதும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.