'8 தோட்டாக்கள்' படத்தை தொடர்ந்து தற்போது சரத்குமாரின் 'ரெண்டாவது ஆட்டம்' திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் கே எஸ் சுந்தரமூர்த்தி.
'8 தோட்டாக்கள்' படத்தின் வெற்றிக்கு கே எஸ் சுந்தரமூர்த்தியின் இசையும் ஒரு முக்கிய காரணம் என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம். கதைக்கேற்ற இசையால் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்த கே எஸ் சுந்தரமூர்த்தி, தற்போது அறிமுக இயக்குநர் பிரித்திவி ஆதித்யாவின் இயக்கத்தில், சரத்குமார் நடிக்கும் 'ரெண்டாவது ஆட்டம்' படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
'என்னுடைய இசைக்கு ரசிகர்கள் மத்தியில் இத்தகைய அமோக வரவேற்பு கிடைக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய இந்த வெற்றிக்கும் உறுதுணையாய் இருந்த 'பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்' ஐ பி கார்த்திகேயன் சாருக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். தமிழ் திரையுலகில் எனக்கென்று ஒரு அடையாளத்தை பெற்று தந்திருக்கிறது 8 தோட்டாக்கள் திரைப்படம். அதுமட்டுமின்றி இந்த படம் மூலம் ஸ்ரீ கணேஷ் போன்ற திறமையான படைப்பாளியோடு பணியாற்றியது எனக்கு மேலும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
என்னுடைய இரண்டாவது படத்திலேயே நான் சரத்குமார் சார் போன்ற மிக பெரிய நட்சத்திரத்தோடு இணைந்து பணியாற்றுவது எனக்கு மிக பெரிய பெருமையாக இருக்கின்றது. என் மீது முழு நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய என் நண்பரும், இயக்குநரமான பிரித்திவி ஆதித்யா அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். நான் குழந்தையில் இருந்து பார்த்து வளர்ந்து என்னுடைய ஹீரோ சரத்குமார் சாரின் படத்திற்கு இசையமைப்பதாலும், இசைக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களம் என்பதாலும், தற்போது என்னுடைய பொறுப்புக்கள் மேலும் கூடி இருக்கின்றது. என்னுடைய முழு திறமையையயும் வெளிப்படுத்த எனக்கு கிடைத்த சரியான படம் இந்த ரெண்டாவது ஆட்டம். நிச்சயமாக ரெண்டாவது ஆட்டம் படத்தின் இசையும், பாடல்களும், சரத் சாரின் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் விருந்தாக இருக்கும்' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இசையமைப்பாளர் கே எஸ் சுந்தரமூர்த்தி.