தமிழகத்தின் கலாசாரப் பாரம்பரியத்துடன் இணைந்த விளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படுகிறது. 2 ஆயிரம் ஆண்டுகள் மிகப் பழமையானது இந்த விளையாட்டுப் போட்டி. ஆனால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.
தமிழகத்திலும், மகாராஷ்டிரத்திலும் ஜல்லிக்கட்டு, எருதுப் போட்டிகள் மூலமாக விலங்குகளை காட்சிப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்தவருடமும் ஜல்லிக்கட்டுப் போட்டி தமிழகத்தில் நடைபெறவேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், காரைக்குடியில் நடிகை த்ரிஷா நடிக்கும் கர்ஜனை படப்பிடிப்பை முற்றுகையிட்டு ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தினார்கள்.
பீட்டாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட த்ரிஷா, மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் தொடரும் என போராட்டம் நடத்தியவர்கள் கூறியுள்ளார்கள்.