தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பங்கேற்று அடிக்கல் நாட்டினர்.
நாசர் தலைமையிலான நிர்வாகம் நடிகர் சங்கத்தின் பொறுப்பை ஏற்றுள்ளது. இந்த அணியினரின் முக்கியத் தேர்தல் அறிவிப்பாக நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டடம் இருந்தது.
இதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் நிதி திரட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை தியாகராயர் நகர், ஹபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் செங்கல் எடுத்துக் கொடுத்து அடிக்கல் நாட்டினர்.
கலைஞர்களின் கோட்டையாக அமையும் - கமல்: அடிக்கல் நாட்டிய பின்னர் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசியது: கட்டடமாக இருந்து, கல்லாகி மறுபடியும் கட்டடமாக எழும் வரை இந்த சரித்திர சக்கரத்தின் சுழற்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அனைவரும் ஒன்று கூடி செய்ததில் மிகவும் சந்தோஷம். இந்தக் கல்லில் நானும் ஒரு சிமென்ட்டாக இருந்ததில் மகிழ்ச்சி. கலைஞர்களுக்கு ஒரு பெரிய கோட்டையாக இந்தக் கட்டடம் அமையும் என்றார் கமல்ஹாசன்.
ரஜினிகாந்த்: இந்த அடிக்கல் நாட்டு விழா வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இனிமேல் அனைத்துமே வெற்றிகரமாக நடக்கும் என்றார் ரஜினிகாந்த்.