

தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கீழ் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு அக்டோபர் 7-இல் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க கூட்டத்தில், பத்திரிகையாளர்கள் மீதான நற்பெயரை சிதைக்கும் வகையில் முன்னணி நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், ஸ்ரீப்ரியா, விவேக், விஜயகுமார், இயக்குநர் சேரன், அருண் விஜய் ஆகியோர் பேசியுள்ளனர்.
இது தொடர்பாக, உதகையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரொசாரியோ மரிய சூசை என்பவர் உதகை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய 8 நடிகர்களையும் நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இவர்கள் நேரில் ஆஜராகாத காரணத்தால் 8 நடிகர்களுக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து, மே 23-ஆம் தேதியன்று நீதிபதி செந்தில் குமார் ராஜவேல் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், உதகை நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என, வழக்குரைஞர் கிருஷ்ணா ரவீந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீட்டார். இதை ஏற்ற நீதிபதி எஸ்.விமலா, உதகையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பத்திரிகையாளர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, மறு உத்தரவு வரும்வரை பிடியாணை உத்தரவை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.