நடிகர் சந்தானத்துக்கு நிபந்தனையுடன்கூடிய முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
சந்தானம் மற்றும் அவரது நண்பரும், கட்டட ஒப்பந்ததாரருமான சண்முகசுந்தரம் இணைந்து, குன்றத்தூர் அருகே திருமண மண்டபத்துடன்கூடிய அடுக்குமாடி கட்டடம் கட்டி வந்தனர். இதில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால், சந்தானம் தான் கொடுத்த பணத்தை சண்முகசுந்தரத்திடம் திருப்பி கேட்டுள்ளார். இந்தப் பிரச்னையில் கடந்த சில தினங்களுக்கு முன் சண்முகசுந்தரம், பிரேம் ஆனந்த் ஆகியோரை சந்தானம் தரப்பினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், நடிகர் சந்தானத்தின் மீது வழக்குப்பதிவுச் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யக்கூடாது என்று கோரி சந்தானம், உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு நீதிபதி ஆதிநாதன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குரைஞர் பிரேம் ஆனந்த் எந்த அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, நடிகர் சந்தானம் இரண்டு வாரத்துக்கு, தினமும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட, நிபந்தனையுடன்கூடிய முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.