ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் - 2.0. இந்நிலையில் சிலவருடங்களுக்கு முன்பு வெளியான தமிழ்படம் படத்தின் அடுத்தப் பாகம் - தமிழ்படம் 2.0 என்கிற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்படத்தை இயக்கிய சி.எஸ். அமுதன் இப்படத்தையும் இயக்கவுள்ளார். அவருடைய இரண்டாவது படமான ரெண்டாவது படம் இன்னும் வெளிவராத நிலையில் தனது அடுத்தப் படத்தைத் தொடங்கியுள்ளார். தலைப்பிலேயே கிண்டல் தொனி உள்ளதால் முதல் பாகம் போலவே இந்தப் படத்தின் நகைச்சுவைக் காட்சிகளும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிர்ச்சி சிவா, ஐஸ்வர்யா மேனன், சதீஷ், திஷா பாண்டே போன்றோர் தமிழ்படம் 2.0-வில் நடிக்கிறார்கள். இந்தப் படம் பூஜையுடன் நேற்று தொடங்கியுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட இப்படத்தின் போஸ்டரில் 'தமிழ்படம் 2.O' போலீஸ் அத்தியாயம் என்று படத்தின் தலைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. மே 25-ம் தேதி பட வெளியீடு என்றும், மே 26-ம் தேதி தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியீடு என்று போஸ்டரில் கிண்டலாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் ஆன்லைன் பைரசி பார்ட்னர் என்று தமிழ் ராக்கர்ஸ் பெயரும் அதன் லோகாவும் குறிப்பிடப்பட்டுள்ளன.