அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் - மெர்சல். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடித்தார்கள். மேலும் சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, கோவை சரளா, யோகி பாபு எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் பங்கேற்றது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த 100-வது படம் இது. மெர்சல் படத்தின் வசூல் ரூ. 250 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடித்திருந்த விஜய், ஒரு கதாபாத்திரத்தில் மேஜிக் நிபுணராக நடித்திருந்தார். மேஜிக் தொடர்பான காட்சிகளில் விஜய்க்குப் பயிற்சியளித்தவர் கனடாவைச் சேர்ந்த மேஜிக் நிபுணர் ராமன் சர்மா. படம் வெளிவந்து ஒருவருடம் ஆனபிறகும் தனக்கான சம்பளத்தை முழுவதுமாகத் தரவில்லை என்று தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் மீது குற்றம் சுமத்தினார் ராமன் சர்மா. இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சம்பளப் பாக்கி தொடர்பாக அவருக்கும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்குமான உரையாடல் இடம்பெற்றுள்ளது.
சம்பளப் பாக்கி பிரச்னைக்குச் சில நாள்களில் தீர்வு காணப்படும் என்று தேனாண்டாள் ஃபிலிம்ஸ் சார்பில் உறுதியளிக்கப்படுகிறது. அப்படித் தரவில்லையென்றால் நான் இந்த விடியோவை வெளியிட்டுவிடுவேன் என்று ராமன் சர்மா பேசுகிறார்.
சொன்னபடி, தற்போது அந்த விடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இதனால் மெர்சல் பட சம்பளப் பாக்கி தொடர்பான சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.