தன்னுடைய பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி சென்னையில் இருக்கமாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். ரசிகர்கள் யாரும் தவறாக நினைக்க வேண்டாம் எனவும் அவர் கூறினார்.
"பேட்ட' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது, இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியது:
கஜா புயலால் உயிரிழந்து, வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யும் தருணம் இது. கஜா புயல் மிகப்பெரிய பேரழிவு, அரசாங்கத்தால் மட்டும் அதனை சரி செய்ய முடியாது. நாம் எல்லோரும் கரம்கோர்ப்போம்.
"2.0' படத்தை வெற்றியடைய வைத்த அனைவருக்கும் நன்றி. இதற்கான பாராட்டுகள் இயக்குநர் ஷங்கரையே சேரும்.
"பேட்ட' படத்தை தமிழ்நாட்டில் எடுக்க முடியாது. அன்புத் தொல்லை. அதனால் வெளிமாநிலத்தில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம். பொங்கலுக்கு நல்ல பொழுதுபோக்கு படமாக இந்தப்படம் இருக்கும்.
சில நாள்களில் எனது பிறந்தநாள் வருகிறது.
பிறந்தநாளுக்கு இங்கே இருக்க மாட்டேன். தவறாக நினைக்க வேண்டாம் என்றார் அவர்.