நடிகர் சங்கத் தேர்தலில் எந்தவித அரசியல் சாயமும் இல்லை என்று நடிகர் உதயா தெரிவித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் ஜூன் 23-இல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் சுவாமி சங்கரதாஸ் அணியில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் உதயா, அவருக்கு ஆதரவாக நடிகர் ஆர்த்தி உள்ளிட்டோர் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள நாடக நடிகர் சங்கக் கட்டடத்தில், நாடக நடிகர்களிடம் சனிக்கிழமை ஆதரவு திரட்டினர். அப்போது, சுவாமி சங்கரதாஸ் அணியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, நடிகர் உதயா செய்தியாளர்களிடம் கூறியது:
சேலத்தில் இருந்துதான் முதல் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. விஷால்மீது தனிப்பட்ட கருத்து வேறுபாடு கிடையாது. தேர்தலில் சுவாமி சங்கரதாஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாடகக் கலைஞர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எந்தவித கலை நிகழ்ச்சியும் நடத்தாமல் நடிகர் சங்கக் கட்டடம் கட்டப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது உடனடியாக நிறைவேற்றப்படும்.
சுவாமி சங்கரதாஸ் அணியில் தலைமை நிர்வாகிக்குப் போட்டியிடும் பாக்யராஜ், ஐசரி கணேஷ் ஆகியோர் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. விஷால் தலைமையிலான பாண்டவர் அணியில் உள்ள நிறைய பேர், சுவாமி சங்கரதாஸ் அணிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். விஷால் படத்தில் சிலர் நடித்து வருவதால், அங்கிருந்து வந்தால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். இதனால் மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். நடிகர் சங்கத் தேர்தலில் எந்தவித அரசியல் சாயமும் இல்லை.
ஏற்கெனவே விஷால் அறிவித்தபடி, திரைப்படம் நடித்துக் கொடுத்திருந்தால் சங்கத்துக்கு ரூ.9 கோடி கிடைத்திருக்கும் என்றார்.
பேட்டியின்போது, சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்கச் செயலரும், முன்னாள் மேயருமான எஸ்.சௌண்டப்பன், பொருளாளரும், எம்எல்ஏவுமான ஏ.பி.சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.