தன்னுடைய ரசிகர்கள் கட் அவுட், பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையில் பொறியியல் பட்டதாரியான சுபஸ்ரீ, சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கட் அவுட், பேனர்கள் வைப்பதை தவிர்க்குமாறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள "காப்பான்' படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் நடிகர் சூர்யா பேசியதாவது: அனைவருக்கும் கவலையளிக்கும் விதமாக ஒரு துயரச் சம்பவம் நடந்துள்ளது. படம் வெளியாகும்போது ரசிகர்கள் கட் அவுட், பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும். ரசிகர்கள் செய்யும் ரத்த தானம் உள்ளிட்ட விஷயங்களைக் கவனித்து வருகிறேன். பேனர் வைப்பதைத் தவிர்த்துவிடுங்கள். அந்தத் தொகையை கல்விக்குச் செலவிடுங்கள் என்றார் நடிகர் சூர்யா.
விஜய் அறிவுறுத்தல்: இதே போல் பிகில் படம் தொடர்பாக எந்த வித பேனர்களும் வைக்க வேண்டாம் என நடிகர் விஜய் தனது ரசிகர்களை அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகிகளுக்கு அவர் அனுப்பியுள்ள செய்தியில் இதை அவர் தெரிவித்துள்ளார்.