சமீபமாக ஆரவாரமில்லாமல், மெதுவாக அதே சமயம் அழுத்தமாக தன் காலடியை தமிழ் சினிமாவில் பதித்த படம் டுலெட்.
எந்த கூச்சலும் இல்லை. எந்த சப்போர்ட்டும் இல்லை. இப்படி எத்தனையோ இல்லைகளுக்கு மத்தியில் அனைத்து *இருக்கு* விசயங்களையும் தன்பால் ஈர்த்துக் கொண்டு 50 நாட்கள் வெற்றி என்ற இலக்கை எட்டியுள்ளது. அதுவும் நான்காவது நாள் படத்தை தூக்கிவிடும் சத்யம் எஸ்கேப் பளாஸோ திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக நின்று விளையாடியுள்ளது. இயக்குநர், ஒளிப்பதிவாளர் செழியன் அவர்களின் திட்டமிடுதல் இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம் எனலாம்.
உடன் உழைத்த நடிகர் நடிகைகள்.. தொழில் நுட்ப கலைஞர்கள் மிகத் துல்லியமானவர்கள். தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அற்புதங்கள். உதவி இயக்குநர்கள் உழைப்பாளிகள். நம்பிக்கைக்குரியவர்கள். இதனாலேயே தன் நிறுத்தக் கோடு தாண்டியும் வென்று கொண்டிருக்கிறது மக்களின் படமான டுலெட். பலருக்கு எடுத்துக்காட்டாய் *டுலெட்டிற்கு முன்* *டுலெட்டிற்கு பின்"* என்ற சினிமா காலம் பிரிக்கப்படலாம். படங்கள் இப்படத்தை முன் மாதிரியாகக் கொண்டு உருவாகலாம். இதன்மூலம் காலம் கடந்தும் நிலைக்கும் டு லெட்.