எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை அடுத்ததாகப் படமாக்கவுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.
செக்கச் சிவந்த வானம் படத்துக்கு அடுத்ததாக மணி ரத்னம் இயக்கவுள்ள இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், அமலா பால், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஆதி ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தில் நடிப்பதை ஐஸ்வர்யா ராய், விக்ரம் ஆகியோர் உறுதி செய்துள்ளார்கள். லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்து தயாரிக்கவுள்ளன. இந்தப் படம் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படத்துக்குத் தான் இசையமைப்பதை உறுதி செய்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். ரோஜா படம் முதல் மணி ரத்னம் இயக்கியுள்ள அத்தனை படங்களுக்கும் இசையமைத்துள்ள ரஹ்மான், இந்தப் படத்திலும் அவருடன் இணையவுள்ளார். இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
நானும் அப்படத்தில் பணியாற்றுகிறேன். படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் தொடர்பான பணிகளை 5 வருடங்களுக்கு முன்பே செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.