மகள் போஷிகாவுக்குப் பாதுகாப்பு இல்லை: தாடி பாலாஜி வருத்தம்!

போஷிகாவை போர்டிங் பள்ளியில் சேர்த்தால் இருவருடைய தொல்லை இல்லாமல் அவளால் படிக்கமுடியும்...
மகள் போஷிகாவுக்குப் பாதுகாப்பு இல்லை: தாடி பாலாஜி வருத்தம்!

சென்னை மாதவரத்தைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி (44), தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அவருடைய மனைவி நித்யா (31). 10 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். போஷிகா என்கிற 8 வயது பெண் குழந்தை உண்டு. இந்நிலையில் கடந்த வருட மே மாதத்தில் நித்யா, பாலாஜி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன் கணவர் தனது ஜாதியைச் சொல்லித் திட்டுவதாகவும் கொடுமைப்படுத்துவதாகத் தனது புகார் மனுவில் குறிப்பிட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிறகு விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார் நித்யா. 

பிறகு, பாலாஜி, நித்யா ஆகிய இருவருமே விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். பாலாஜியும் நித்யாவும் ஒன்றாக இணைந்து வாழவேண்டும் என்று போட்டியாளர்கள் இருவருக்கும் ஆலோசனை அளித்துள்ளார்கள். பல நாள்களில் இப்பிரச்னை குறித்து நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. விவகாரத்து வரை சென்ற பாலாஜி - நித்யா குடும்பப் பிரச்னை இதனால் சுமூக நிலையை அடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவருக்கும் இடையிலான பிரச்னை மீண்டும் ஆரம்பித்துள்ளது. 

தாடி பாலாஜி தனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும், கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் நித்யா.

இந்நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த தாடி பாலாஜி இந்த விவகாரம் குறித்துக் கூறியதாவது:

உள்ளே என்ன பிரச்னை நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. அதனால் தான் இந்தச் செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறேன். நான் அமைதியாக இருப்பதால் என் மீது போலியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. இதற்கு முன்பு என்னைப் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் அளித்ததில்லை. இப்போது பேட்டி தருவதற்குக் காரணம் என் மகள் போஷிகாவுக்குப் பாதுகாப்பு கிடையாது. என் மகளுக்கு என்ன தேவையோ ஒரு தந்தையாக நான் செய்யத் தயார். ஆனால் என்ன பேசவேண்டும் என்று என் குழந்தைக்குச் சொல்லித் தருகிறார்கள். 

தம்பதியராக இருந்தபோது படப்பிடிப்புக்கு வெளியூர் சென்றால் குடும்பத்தையும் அழைத்துச் செல்வேன். அப்போது என்னிடம் பலரும் ஆட்டோகிராப் கேட்கும்போதும் புகைப்படங்கள் எடுக்கும்போதும் பொறாமை கொள்வார் நித்யா. அவருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவேண்டும் என்கிற விருப்பம் ஏற்பட்டது. 

என் மன உளைச்சலுக்குக் காரணம் காவல்துறை ஆய்வாளர் ஒருவரும் ஜிம் பயிற்சியாளர் ஒருவரும் தான். எனக்கு உதவ வந்து எனக்கு எதிராகத் திரும்பினார் ஆய்வாளர். அந்த ஆய்வாளரை இடைநீக்கம் செய்யவேண்டும். 

என் குடும்பம் சேரவேண்டும் என்று விஜய் டிவிக்கு என்ன தேவை? பிக் பாஸில் நித்யா செய்தது அனைத்துமே நடிப்பு. தற்போது நித்யாவை இயக்குவது காவல் ஆய்வாளர் தான். 

தேர்தலில் நிற்பதாக நித்யா கூறியுள்ளார். குடும்பத்தைப் பார்க்கமுடியாத நித்யாவுக்கு நாட்டைப் பற்றி என்ன தெரியும்? என் பிரச்னைகள் கமல் சாருக்குத் தெரியும். குழந்தையின் படிப்பைக் கவனிக்கச் சொன்னார். நான் குடிக்கிறேன் என்று சொல்கிறார்கள். இப்பவும் வருகிறேன். மருத்துவரிடம் என்னைப் பரிசோதனை செய்துகொள்ளலாம். 

போஷிகாவை போர்டிங் பள்ளியில் சேர்த்தால் இருவருடைய தொல்லை இல்லாமல் அவளால் படிக்கமுடியும். தேவையில்லாமல் ஊடகங்களிடம் போஷிகாவைப் பேசவைக்கிறார் நித்யா. என்னுடைய தொலைப்பேசி விவரங்கள் எடுக்கப்படுகின்றன. நித்யா திருந்துவதுபோலத் தெரியவில்லை. ஒரே விஷயம் தான். பாப்பாவை போர்டிங் பள்ளியில் சேர்க்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com