அஜித் - சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் - விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜகபதி பாபு, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, கோவை சரளா போன்றோரும் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு இசை - இமான், ஒளிப்பதிவு - வெற்றி. இந்தப் படம் கடந்த 10-ம் தேதி வெளியாகியது.
இந்நிலையில் இப்படத்தின் சில காட்சிகளில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து நடித்துள்ளார்கள் அஜித்தும் நயன்தாராவும். இதற்கு, சென்னை காவல் துணை ஆணையர் ச. சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார். தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
சமீபத்தில் வெளியான நடிகர் அஜித் குமார் நடித்த விஸ்வாசம் படத்தினைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் கதை, பாடல், நடிப்பு, சண்டைகாட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்குச் சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தன.
* படத்தில் கதாநாயகன், கதாநாயகி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்துச் செல்வது...
* கதாநாயகன் கார் ஒட்டும்போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது, தனது மகளின் உயிரைக் காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது...
* பெற்றோர்கள் தங்கள் கனவுகளைக் குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது...
இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பல லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட அஜித் குமார் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுற்றி நடிக்கும்போது அவரது ரசிகர்களும் பின்பற்றவேண்டும் என்பதே எனது அவா.
விஸ்வாசம் படத்தின் கதாநாயகன் அஜித் குமார் மற்றும் இயக்குநர் சிவா, அவரது குழுவினருக்குப் பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.