விக்ரமன் தலைமையிலான குழு, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க நிர்வாகத்தைக் கவனித்து வந்தது. இந்த நிர்வாகத்தின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த நிலையில், கடந்த மாதம் சென்னையில் நடந்த பொதுக்குழுவில், தேர்தல் இல்லாமல் ஒருமனதாக இயக்குநர் பாரதிராஜா சங்கத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜனநாயக முறைப்படி தேர்வு நோக்கத்தில் எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன். என்னைப் போட்டி இல்லாமல் தலைவராகத் தேர்வு செய்த இயக்குநர் சங்க பொதுக்குழுவுக்கு நன்றி. ஆனால், தேர்தல் இல்லாமல் தலைமைப் பதவிக்கு வருவது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதை அறிவேன். சங்கத்தின் மூத்த உறுப்பினராக எனது பேரன்பு தொடரும் என்று தெரிவித்து, இயக்குநர் சங்கத் தலைவர் பதவியை பாரதிராஜா ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து, இயக்குநர் சங்கத்தின் அனைத்து பொறுப்புகளுக்கும் வரும் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று நடைபெற்ற தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.