விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.
பிக் பாஸ் போட்டி தொடங்கும்போது முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்தார் செய்தி வாசிப்பாளராகப் புகழ்பெற்ற ஃபாத்திமா பாபு. ஆனால், ரசிகர்களின் குறைந்த வாக்குகளைப் பெற்று முதல் போட்டியாளராக ஃபாத்திமா பாபு கடந்த வாரம் வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் இந்த வாரம் வெளியேறுபவருக்கான எலிமினேஷன் நடைமுறையில் வனிதா விஜயகுமார், மீரா மிதுன், மதுமிதா, சரவணன், மோகன் வைத்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். இவர்களில் வனிதாவை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றவேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
சினிமா எக்ஸ்பிரஸ் இணைய இதழுக்கு ஃபாத்திமா பாபு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஒரு டாஸ்கில் மீரா மிதுன் தாமதமாக வந்ததற்குக் குறை கூறினார் வனிதா. ஆனால் அவரே பல டாஸ்க்குகளுக்குத் தாமதமாகத்தான் வந்துள்ளார். அவர் வெளியேற்றப்படுவார் என நினைக்கவில்லை. அவரை மக்களுக்குப் பிடிக்காவிட்டாலும் அவர் வெளியேற்றப்பட மாட்டார். அவர் நிகழ்ச்சிக்குத் தேவையான மசாலாவை வழங்குகிறார். அவர் இல்லாத பிக் பாஸ் சுவாரசியமில்லாமல் போய்விடும். இறுதிச்சுற்று வரை அவர் வரமாட்டார். ஆனால் சிறிது காலம் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீடிப்பார் என்று கூறியுள்ளார்.