தேர்தல் நடவடிக்கைகளில் விஷால் குழப்பங்களை ஏற்படுத்துவதாக சுவாமி சங்கரதாஸ் அணியினர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்கத் தேர்தல் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியான பத்மநாபனை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் புகார் மனு அளிக்கப்பட்டது. பாக்யராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த் உள்ளிட்டோர் கூட்டாக புகார் மனு அளித்தனர்.
அதன்பின்னர், செய்தியாளர்களிடம் ஐசரி கணேஷ் கூறியதாவது: தேர்தல் அதிகாரி மூலம் வர வேண்டிய அறிவிப்புகள் விஷால் மூலமாக ஊடகங்களுக்கு வந்து விடுகின்றன.
அது எப்படி என்று எங்களுக்குப் புரியவில்லை. இனி தேர்தல் குறித்து வர வேண்டிய தகவல்களையும் அவரே சொல்லி விடுவார் எனத் தெரிகிறது.
அது குறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளோம். கிட்டத்தட்ட 1500 வாக்குகள் தபால் மூலமாக தங்களது அணிக்குப் பதிவாகி விட்டதாக விஷால் ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
இதனால் தேர்தலை விஷால் நடத்துவதுபோல் தெரிகிறது.
அதுபோல் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து உறுப்பினர்களின் நீக்கம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 50 உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அது குறித்தும் தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்தோம். தேர்தல் நடக்கும் இடமான எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. அது குறித்து விளக்கம் கேட்டால், எங்களுக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை என்கிறார்கள.
தேர்தல் நடத்தும் இடத்துக்காக விஷால் காவல் துறையிடம் அனுமதி கேட்கிறார். விஷால் தேர்தல் நடத்தும் அதிகாரி போல் செயல்படுகிறார்.
மாதிரி வாக்குச் சீட்டும் தேர்தல் அலுவலகத்தில் ஒட்டப்பட வேண்டும். அது குறித்த தகவலும் இல்லை.இது குறித்தெல்லாம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.