எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை அடுத்ததாகப் படமாக்கவுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.
செக்கச் சிவந்த வானம் படத்துக்கு அடுத்ததாக மணி ரத்னம் இயக்கவுள்ள இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ் போன்றோர் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கவுள்ளது. படத் தயாரிப்பில் லைகா அல்லது ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்களும் இணையவுள்ளன.
வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழராக அமிதாப் பச்சன், வல்லவராயன் பெரிய பழுவேட்டரையராக தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ் போன்றோர் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐஸ்வர்யா ராய் தவிர வேறு யாரும் இந்தப் படத்தில் நடிப்பதை உறுதி செய்யவில்லை.
இந்நிலையில் இந்தப் படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் மணி ரத்னத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார் குணச்சித்திர நடிகரான இளங்கோ குமரவேல். அபியும் நானும் உள்ளிட இயக்குநர் ராதா மோகனின் படங்களில் நடித்து இவர் கவனம் பெற்றுள்ளார். இதுதவிர மணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய வேடத்திலும் அவர் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.