ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் 'தர்பார்'. இப்படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். இது ரஜினி நடிக்கும் 167-வது படம்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் அடுத்த வருடப் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.
ரஜினி காவல் அதிகாரியாக நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த தகவல். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் நிலையில், இந்தப் படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் நடிக்கிறார். பிரதீக் நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகர்கள் ராஜ் பப்பர், ஸ்மிதா படீலின் மகன் ஆவார். படத்தில் முக்கியமான வில்லன் அவர் இல்லை என்றாலும் அக்கதாபாத்திரம் படத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றனர் படக்குழுவினர்.
அண்மையில், திருநங்கை ஜீவா 'தர்பார்' படத்தில் நடிக்கிறார் என்ற தகவலை அறிந்த இயக்குநர் சீனுராமசாமி தனது ட்விட்டரில் ஜீவாவை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
திருநங்கை ஜீவா, 'நன்றி சார், எல்லாம் நீங்கள் தந்த வாழ்க்கை' என இதற்கு பதில் அளித்துள்ளார். நெட்டிசன்கள் ஜீவாவிற்கு தங்களது வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.