காஞ்சனா 3 படம் வசூலில் அசத்தி வரும் நிலையில், தனது ஹிந்திப் படத்தைச் சமீபத்தில் தொடங்கினார் இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ்.
காஞ்சனா படத்தை லக்ஷ்மி பாம் என்கிற பெயரில் அவர் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது. கதாநாயகியாக கியாரா அத்வானி தேர்வானார்.
ஆனால், திடீரென இப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் ராகவா லாரன்ஸ். தன்னுடைய அனுமதியின்றி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டதால் அதிருப்தியில் அந்த முடிவை எடுத்தார்.
இந்நிலையில், தனக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டால், லக்ஷ்மி பாம் படத்தை மீண்டும் இயக்கத் தயாராக உள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியதாவது:
படத்திலிருந்து விலகுவதாக அறிவித்த பிறகு அக்ஷய் குமார் ரசிகர்களும் என்னுடைய ரசிகர்களும் படத்தை நானே இயக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்கள். அவர்கள் அன்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன். ஆனால் கடந்த ஒரு வாரம் நடைபெற்ற நிகழ்வுகளில் நான் வருத்தமாக உள்ளேன். படப்பிடிப்புக்கு முந்தைய பணிகளில் அதிக நேரம் செலவிட்டுள்ளேன், இப்படத்துக்காக என்னுடைய தேதிகளை ஒதுக்கியுள்ளேன். எனவே நானும் இப்படத்தை இயக்க ஆவலாகவே இருந்தேன். நாளை, தயாரிப்பாளர்கள் சென்னை வந்து என்னைச் சந்திக்கவுள்ளார்கள். எனக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டால், நான் இப்படத்தை மீண்டும் இயக்குவேன். இதெல்லாம் அவர்கள் கையில்தான் உள்ளன. சந்திப்புக்குப் பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.