பெங்களூரில் இளையராஜாவின் முதல் இசை விழா: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

பெங்களூரில் இசைஞானி இளையராஜா நடத்திய முதல் இன்னிசை விழா கோலாகலமாக நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
பெங்களூரில் நடந்த இசைவிழாவில் இசைஞானி இளையராஜாவை கெளரவிக்கிறார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா.
பெங்களூரில் நடந்த இசைவிழாவில் இசைஞானி இளையராஜாவை கெளரவிக்கிறார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா.


பெங்களூரு: பெங்களூரில் இசைஞானி இளையராஜா நடத்திய முதல் இன்னிசை விழா கோலாகலமாக நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளின் திரைப்படங்களுக்கு இசையமைத்து உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ள இசைஞானி இளையராஜாவின் இசை விழா, பெங்களூரில் முதல்முறையாக சனிக்கிழமை நடைபெற்றது. "இசை கொண்டாடும் இசை' என்ற பெயரில் நடந்த இசைவிழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டு, ரசித்தனர். தனது 75-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் இசை விழாக்களை நடத்திவரும் இளையராஜா, தனது இசையில் வெளியான கன்னடப் பாடல்களுடன் இசை விழாவைத் தொடங்கினார்.

கன்னடம் தவிர, தமிழ், தெலுங்கு, ஹிந்தி படப் பாடல்களும் இசை விழாவில் இடம்பெற்றன. முன்னதாக, இசை விழாவை பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பாஸ்கர்ராவ் தொடக்கி வைத்தார்.

இந்த இசைவிழாவின் ஊடகப் பங்குதாரராக விளங்கிய தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் கர்நாடக பொது மேலாளர் சுரேஷ், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

ரசிகர்களின் ஆரவாரத்தோடு நடந்த இசை விழாவில் 100 இசைக்கலைஞர்களுடன் பிரபல பின்னணிப் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோ, உஷா உதூப், மது பாலகிருஷ்ணன், முகேஷ், பவதாரணி உள்ளிட்ட முன்னணி பாடகர்கள் கலந்துகொண்டு பாடினர்.

இசை விழாவில் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்ற முதல்வர் எடியூரப்பா, இளையராஜாவுக்கு மாலை அணிவித்து கெளரவித்தார். அதன்பிறகு முதல்வர் எடியூரப்பா பேசியது:

இசை உலகின் தலைமகனாக விளங்கும் இளையராஜா பெங்களூரில் முதல்முறையாக நடத்தும் இசை விழாவில் பங்கேற்றதை பெருமையாகக் கருதுகிறேன். கடந்த 40 ஆண்டுகளில் அவரது இசையில் வெளியான பாடல்களை கேட்டு ரசித்தவர்களில் நானும் ஒருவன். கன்னட திரையுலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய ராஜன்நாகேந்திரா கொடிகட்டி பறந்த காலத்தில், கன்னடப் படங்களுக்கு இளையராஜா இசையமைத்து கன்னட ரசிகர்களின் மனங்களை வென்றிருந்தார். இன்றைக்கும் அவர் இசை அமைத்த கன்னடப் பாடல்கள் கர்நாடகத்தில் தினமும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட இசைக் கலைஞரான இளையராஜா பெங்களூரில் இசை கச்சேரியை நடத்துவது மகிழ்ச்சியாக உள்ளது என்றார் அவர்.

இசை நிகழ்ச்சிக்கு இடையே இளையராஜா பேசுகையில், "நான் இசை அமைத்து வெளியான முதல் படம் "அன்னக்கிளி' வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, எனக்கு ரசிகர்களிடையே தனிமதிப்பு கிடைத்தது. அதன் விளைவாக எனக்கு புதிய உற்சாகம் கிடைத்தது. ரசிகர்கள் கொடுத்த ஆதரவு, பாடகர்கள், இசைக் கலைஞர்களின் ஒத்துழைப்பால் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இசைக்கு மொழி கிடையாது. எனக்கு கன்னடம் சரளமாகப் பேசத் தெரியாது என்றாலும், இசையை புரிந்துகொண்டு பாடல் கொடுத்துள்ளேன். நடிகர் ராஜ்குமாரின் படங்களுக்கும் நான் இசை அமைத்துள்ளேன். கன்னட மக்களின் அன்பால், ஆதரவால் பல கன்னடப் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது' என்றார் அவர்.

இடையில் பிணக்கு ஏற்பட்ட பிறகு இணைந்துள்ள இளையராஜாவும் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இசை விழாவில் கலகலப்பாகப் பேசியும், பாடியும் ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com