சென்னை: தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ள பிகில் படத்துக்கு சிறப்பு காட்சியை அனுமதிப்பது குறித்து, தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்த கருத்துக்களால் மேலும் சிக்கல் உருவாகியுள்ளது.
ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடித்துள்ள பிகில் படத்தை இயக்கியுள்ளார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு.
இந்தப்படத்தின் கதை தன்னுடையது என்று செல்வா என்ற உதவி இயக்குநர் தொடர்ந்துள்ள வழக்கால் ஏற்கனவே படக்குழுவினர் சிக்கலால் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் பிகில் படத்துக்கு சிறப்பு காட்சியை அனுமதிப்பது குறித்து, தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்த கருத்துக்களால் மேலும் சிக்கல் உருவாகியுள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு செவ்வாயன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள கருத்துக்களாவன பின்வருமாறு:
தீபாவளியையொட்டி வெளியாகும் பிகில் உள்ளிட்ட எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை.
அதிக விலைக்கு டிக்கெட் விற்பனையில்லை என உறுதியளித்தால் மட்டுமே சிறப்பு காட்சியை அனுமதிக்க அரசு தரப்பில் பரிசீலிக்கப்படும்.
அதேசமயம் பிகில் படத்துக்கு அதிக கட்டணம் வசூல் செய்தால் அரசு பொறுப்பேற்காது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.