கஸ்தூரியின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் ஏன் நீக்கப்பட்டது?
90-களில் பிரபல நடிகையான கஸ்தூரி கிட்டத்தட்ட எல்லா முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தற்போது அவருக்கு 46 வயதாகிறது. தனது உடலை ஸ்லிம்மாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிப்பதால் நடுத்திர வயதிலும் இளமையாக தோற்றமளிப்பவர் கஸ்தூரி. தன்னுடைய பெர்சனல் விஷயங்கள் மட்டுமன்றி சமூகம் சார்ந்த விஷயங்களையும் மனம் திறந்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காரசாரமான பதிவுகளை எழுதியும், இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பகிர்ந்தும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்படுபவர் கஸ்தூரி. வெளிப்படையான அவரது கருத்துக்களால் சர்ச்சைகளுக்கும் உள்ளாகியிருக்கிறார்.
இந்த முறை கஸ்தூரியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்ட சில புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு இன்ஸ்டாகிராம் நிர்வாகம், விதிமுறைகளை மீறும் வகையில் கஸ்தூரியின் புகைப்படங்கள் இருந்தன எனக் காரணம் தெரிவித்துள்ளது.
அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் ரியல் ஸ்கின் என்று கஸ்தூரி கேப்ஷன் கொடுத்திருந்தது புகைப்பட நீக்கப்பட்டதற்கான காரணமாக கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராமிலிருந்து தன்னுடைய புகைப்படங்கள் நீக்கப்பட்டதற்கு நடிகை கஸ்தூரி புகார் தெரிவித்துள்ளார். மேலும் இன்ஸ்டாகிராம் வெளியிட்ட விதிமீறல் விளக்கத்தை ஃபோட்டோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, 'இன்ஸ்டாகிராமிலிருந்து எனது போட்டோக்கள் அடிக்கடி நீக்கப்பட்டு வருகின்றன. காரணம் இன்ஸ்டாகிராம் விதிமுறைகளை நான் மீறியுள்ளேன் என்கிறார்கள்’ என்றார்.
தனது நீக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு இதில் என்ன விதிமுறை மீறல் இருக்கிறது என்று நீங்களே பார்த்து சொல்லுங்கள் என்று கஸ்தூரி பதிவிட்டுள்ளார். தேவையில்லாமல் கேலி செய்பவர்கள் உடனடியாக பிளாக் செய்யப்படுவார்கள் என்று கண்டனம் தெரிவித்துள்ளார் கஸ்தூரி.