நடிகர்கள் சூர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள காப்பான் திரைப்படத்துக்குத் தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் தாக்கல் செய்த மனுவில், இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள காப்பான் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. நான் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகத் திரைத்துறையில் பணியாற்றி பல கதைகளை எழுதியுள்ளேன். சரவெடி என்னும் தலைப்பில் ஒரு கதையை எழுதினேன். அந்தக் கதையை காப்புரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 2016-ஆம் ஆண்டு பதிவு செய்தேன். இந்தக் கதையை இயக்குநர் கே.வி.ஆனந்திடம் கூறியிருந்தேன். அவர் இந்த கதையைத் திரைப்படமாக்கும்போது எனக்கு வாய்ப்பு தருவதாகக் கூறியிருந்தார். அந்த வாய்ப்புக்காக நானும் காத்திருந்தேன். ஆனால் என்னுடைய கதையான சரவெடியை இயக்குநர் கே.வி.ஆனந்த், காப்பான் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார். அண்மையில் இந்தத் திரைப்படத்தின் விளம்பரம் தொலைக்காட்சிகளில் வெளியானது. எனது அனுமதி இல்லாமல் என்னுடைய கதையை வேறொரு தலைப்பில் திரைப்படமாக எடுத்துள்ளார். எனவே, இந்தத் திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா நிறுவனம் சார்பாகப் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சரவெடியின் கதையும் காப்பான் படத்தின் கதையும் வேறு எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இயக்குநர் கே.வி. ஆனந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மனுதாரரை தான் சந்தித்ததில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.