இயக்குநர் கார்த்திக் நரேன் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து தனது புதிய படமான மாஃபியாவின் டீஸரைக் காண்பித்தார். கார்த்திக் இதனை தனது டிவிட்டரில் உற்சாகமாக பகிர்ந்தார். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி தன்னிடம் கூறியதை பதிவிட்டார்: 'புத்திசாலித்தனமான படம் கண்ணா. செமயா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’.
இந்த சந்திப்பு குறித்து கார்த்திக் கூறியது, ‘இதுதான் மாஃபியா டீஸரைப் பார்த்த ரஜினி சார் சொன்ன வார்த்தைகள். கடவுளுக்கு நன்றி, நான் மயக்கம் போட்டு விழுந்துவிடவில்லை. ரஜினி சாரின் எளிமை பிரமிக்க வைத்தது. படத்தின் டீஸரை இன்று (திங்கள்கிழமை) மாலை 6.00 மணிக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டரில் வெளியிடுகிறார்.
முன்பு சினிமா எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில், கார்த்திக் தனது படம் பற்றி இவ்வாறு கூறினார்: 'இது பெயருக்கு ஏற்ற வகையில் ஒரு கேங்க்ஸ்டர் படம்தான். சென்னையை மையமாக வைத்து அமைக்கப்பட்டிருப்பதால், முழு படப்பிடிப்பும் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படமாக்கப்படும். படப்பிடிப்பை 35 நாட்களில் ஒரே ஷெட்யூலில் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் இப்படத்தில் உள்ளனர். அவர்களுடைய கதாபாத்திர சித்தரிப்புக்களை நுட்பமான குறிப்புகளை படத்தினூடே இணைத்துள்ளோம். மூன்று முக்கிய நடிகர்களும் இதற்கு முன்பு செய்யாத பாத்திரங்களை ஏற்றுள்ளார்கள்.’என்று கூறினார் கார்த்திக்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள மாஃபியா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அரவிந்த்சாமிதான் ஆரம்பத் தேர்வாக இருந்தார், ஆனால் அந்தப் பாத்திரம் இறுதியில் அருண் விஜய்க்கு சென்றது. கார்த்திக் நரேனின் திரைக்கதையால் மறுக்க முடியாத அளவுக்கு அருண் விஜய் ஈர்க்கப்பட்டாராம். இந்தப் படத்தில் கதாநாயகி பிரியா பவானி சங்கர். படத்தில் பிரசன்னாவும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
இசை - ஜேக்ஸ் பெஜாய், ஒளிப்பதிவு - கோகுல் பெனாய் மற்றும் எடிட்டிங் - ஸ்ரீஜித் சாரங் ஆகியோர் தொழில்நுட்பப் பிரிவில் அடங்குவர். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையில், அக்னி சிறகுகள் பட வெளியீட்டை அருண் விஜய் பெரிதும் எதிர்பார்க்கிறார். இது நவீன் இயக்கிய ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படம். அம்மா கிரியேஷன்ஸ் சார்பாக டி சிவா தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் அருண் விஜய்யுடன் விஜய் ஆண்டனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப் படத்திற்காக அருண் விஜய் வியட்நாமில் உள்ள லியன்பாங் மார்ஷியல் சென்டரில் தற்காப்பு கலைகளில் சிறப்பு பயிற்சி பெற்றார் என்கிறது படக்குழு.
“Brilliant work kanna. Semaya irukku. Loved it” These were Rajini sir’s words after watching the teaser of Mafia. Thank god I did not faint. Blown away by his humility. Thalaivar for a reason pic.twitter.com/e6pdZtOjbI
mdash; Karthick Naren(@karthicknaren) September 14 2019