கரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் தவித்த திரைப்பட இயக்குநர், தற்போது சென்னையில் மளிகைக்கடை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஒரு மழை நான்கு சாரல், மெளன மழை என சிறிய பட்ஜெட் படங்களை இயக்கியவர் ஆனந்த். திரைத்துறையில் 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். துணிந்து செய் என்கிற படத்தைத் தற்போது இயக்கி வருகிறார். இந்நிலையில் கரோனா ஊரடங்கால் வேலையின்றி தவித்த ஆனந்த், நிலைமையைச் சரிசெய்ய சென்னை மவுலிவாக்கத்தில் மளிகைக்கடையைத் திறந்துள்ளார். தன் நண்பருக்குச் சொந்தமான ஒரு கட்டடத்தை வாடகைக்கு எடுத்து மளிகைக் கடை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஊரடங்கினால் வேலையின்றி வீட்டில் முடங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. காய்கறி மற்றும் மளிகைப் பொருள்களை விற்க அனுமதி உள்ளதால் மளிகைக் கடையைத் திறந்துள்ளேன். திரையரங்குகள் திறந்தால் தான் எங்களுக்கு மீண்டும் வேலை கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டுக்குள் திரைப்படத்துறை வழக்கம்போல செயல்படும் எனத் தோன்றவில்லை. மால்கள், பூங்காங்கள் திறக்கப்பட்ட பிறகுதான் திரையரங்குகளும் இயங்கத் தொடங்கும். எனவே நிலைமை மாறும் வரை மளிகை வியாபாரத்தில் ஈடுபடுவேன் என்று ஆனந்த் பேட்டியளித்துள்ளார்.