ஏரியில் மகனுடன் படகில் சென்ற ஹாலிவுட் நடிகை, நீரில் மூழ்கிவிட்டதாக அஞ்சப்படுகிறது. இதையடுத்து படகில் தனியாகத் தத்தளித்த 4 வயது மகன் காப்பாற்றப்பட்டுள்ளார்.
தெற்கு கலிபோர்னியா உள்ள பிரு ஏரியில் கடந்த புதன் அன்று மதியம் 1 மணிக்கு தனது 4 வயது மகனுடன் படகில் சென்றுள்ளார் 33 வயது ஹாலிவுட் நடிகை நயா ரிவேரா. சில மணி நேரங்கள் கழித்து மற்றொரு படகில் சென்ற ஒருவர், ரிவேராவின் 4 வயது மகன் மட்டும் படகில் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பிறகு 4 வயது சிறுவன் மீட்கப்பட்டுள்ளார். பிறகுதான் படகில் சென்ற நயா ரிவேரா காணாமல் போனது தெரிய வந்தது.
படகை வாடகைக்கு எடுத்துச் சென்ற ரிவேரா, தனது மகனுடன் நீச்சல் அடித்துள்ளார். பிறகு ரிவேரா மீண்டும் படகுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் 4 வயதுச் சிறுவன எப்படி மீண்டும் படகில் மீண்டும் ஏறினார் என்பதும் தெரியவில்லை. மூன்று மணி நேரத்துக்குப் படகு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. படகில் மற்றொரு லைஃப் ஜாக்கெட் இருந்துள்ளது. மேலும் பார்க்கிங் பகுதியில் அவர் தனது காரை விட்டுச் சென்றுள்ளார்.
ஆரம்பத்தில் ரிவேராவைக் காப்பாற்ற முயன்றார்கள் காவல்துறையினர். ஆனால் 24 மணி நேரம் கழிந்த பிறகும் கிடைக்காததால் நீரில் மூழ்கி ரிவேரா இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் தற்போது ரிவேராவின் உடலை மீட்டுக்கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியில் ஹெலிகாப்டர், படகுகளுடன் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
படகில் சென்றபோது விபத்து ஏற்பட்டு ரிவேரா நீரில் மூழ்கியிருக்கலாம் என எண்ணுகிறோம் என்று காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளார்கள்.
கிளீ என்கிற தொடரின் மூலமாக அதிகப் புகழை அடைந்தார் நயா ரிவேரா. 2002 முதல் ஆறு படங்களில் நடித்துள்ளார்.