சென்னை: அடுத்த ஆண்டு மார்ச் இறுதிவரை தமிழ்த் திரைப்படங்கள் சுமுகமாக வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திரையரங்குகளில் படத்தை ஒளிபரப்பு செய்வதற்காக டிஜிட்டல் நிறுவனங்கள் வசூலிக்கும் வி.பி.எப் எனப்படும் கட்டணத்தை இனிமேல் தயாரிப்பாளர்கள் செலுத்த முடியாது என்று பாரதிராஜா தலைமையிலான நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியாக முடியாத சூழல் ஏற்பட்டது. பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் இரண்டு வாரங்கள் மட்டும் படங்களை ஒளிபரப்புவது என்று முடிவானது.
அதேசமயம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் டிஜிட்டல் நிறுவனங்கள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் இறுதிவரை தமிழ்த் திரைப்படங்கள் சுமுகமாக வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.