மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பெயரில் டப்பிங் ஸ்டூடியோ ஒன்று சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் செப்டம்பர் 25 அன்று உயிரிழந்தாா்.
சௌத் இண்டியன் சினி டிவி ஆர்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியனில் உறுப்பினராக இருந்தவர் பாடகர் எஸ்.பி.பி. இந்நிலையில் அவருடைய நினைவாக எஸ்.பி.பி. ஸ்டூடியோ என்கிற டப்பிங் ஸ்டூடியோ, டப்பிங் யூனியன் தலைவரும் நடிகருமான ராதாரவி தலைமையில், செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் சென்னையில் இன்று திறக்கப்பட்டுள்ளது.
சென்ற மாதம் எஸ்.பி.பி. மறைவுக்கு இரங்கல் அஞ்சலி செலுத்தியபோது அவருடைய நினைவாக டப்பிங் ஸ்டூடியோ நிறுவப்படும் என ராதாரவி கூறினார். அதன்படி இன்று எஸ்.பி.பி. பெயரில் டப்பிங் ஸ்டூடியோ திறக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.பி.க்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த ஸ்டூடியோவை டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி திறந்திருப்பது தங்களுக்குப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாகவும் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.