கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் தாமரைப்பாக்கம் - செங்குன்றம் சாலையில் உள்ள பண்ணை வீட்டில் காவல் துறை மரியாதையுடன் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு திரைத் துறையினா், அரசியல் பிரமுகா்கள் அஞ்சலி செலுத்தினா்.
சென்னையில் எஸ்.பி.பி. நினைவஞ்சலிக் கூட்டம் கடந்த புதன் அன்று நடைபெற்றது. விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு எஸ்.பி.பி. தொடர்பான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். காணொளி வழியாக நடிகர் சிவகுமார் கூறியதாவது:
எஸ்.பி.பி. என்னை விட ஐந்து வருடம் சிறியவர். அவர் முதல் முதலில் எனக்குப் பாடிய பாடல், மல்லிகைப் பூ வாங்கி வந்தேன். பால் குடம் படத்துக்காக. இதற்கு முன்பே சாந்தி நிலையம் படத்துக்காக இயற்கை என்னும் இளைய கன்னி பாடலை ஒலிப்பதிவு செய்துவிட்டார்கள். எம்ஜிஆருக்காக ஆயிரம் நிலவே வா பாடலையும் ஒலிப்பதிவு செய்துவிட்டார்கள்.
ஆனால் பால்குடம் படம் தான் முதலில் வெளியானது. 1969 பொங்கலுக்கு இந்தப் படம் வெளியானது. சாந்தி நிலையமும் அடிமைப்பெண்ணும் மே மாதம் தான் வெளியாகின. அந்தக் கணக்குப்படிப் பார்த்தால் எஸ்.பி.பி. தமிழில் எனக்குத்தான் முதலில் பாடியிருக்கிறார் என்றார்.