போதைப் பொருள் விவகாரம்: நடிகை ரியா கைது!

கஞ்சா கலந்த சிகரெட்டைப் பயன்படுத்தியாக ரியா கூறியதையடுத்து இந்த நடவடிக்கை
கைது செய்யப்பட்ட பின் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்படும் ரியா சக்கரவர்த்தி
கைது செய்யப்பட்ட பின் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்படும் ரியா சக்கரவர்த்தி

போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை ரியாவைப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இன்று கைது செய்துள்ளது.

பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங், மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அவருடைய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில், சுசாந்தின் காதலி ரியாவுக்கு இந்த மரணத்தில் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளதாக சுசாந்த்தின் தந்தை பிகார் காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். அதனடிப்படையில், ரியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

ரியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் மீது போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) சார்பிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ரியா மற்றும் அவருடைய சகோதரர் ஷோவிக் ஆகியோர் தங்கியிருக்கும் வீட்டிலும் நடிகர் சுசாந்த்தின் மேலாளர் சாமுவல் மிராண்டாவின் வீட்டிலும் என்சிபி அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் ஷோவிக், மிராண்டா மற்றும் நடிகர் சுசாந்த்தின் வீட்டு உதவியாளர் தீபேஷ் சாவந்த் ஆகிய மூவரையும் என்சிபி அதிகாரிகள் கைது செய்தனர்.

பின்னர், விசாரணைக்கு ஆஜராகுமாறு ரியாவுக்கும் அழைப்பாணை அனுப்பினர். அதன்படி மும்பை பல்லார்டு எஸ்டேட் பகுதியில் உள்ள என்சிபி அலுவலகத்தில் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை ஆஜரான ரியாவிடம், அதிகாரிகள் 6 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் தொடர்ந்து இரண்டாவது நாள் விசாரணைக்காக திங்கள்கிழமை என்சிபி அலுவலகத்தில் ரியா ஆஜரானார். காவல்துறையினர் பாதுகாப்புடன் வந்த அவர், கையில் பை ஒன்றை எடுத்து வந்திருந்தார். விசாரணை குறித்து என்சிபி அதிகாரிகள் கூறுகையில், "தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக அவர்களின் செல்லிடப்பேசி உரையாடல்கள் அடிப்படையில் மேலும் சில தகவல்கள் பெற வேண்டியிருப்பதால் ரியா உள்ளிட்ட நால்வரிடமும் ஒரே இடத்தில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என்றனர். இந்த வழக்கில் இதுவரை 9 பேரை என்சிபி கைது செய்துள்ளது.

மூன்றாவது விசாரணைக்காக என்சிபி அலுவலகத்தில் ரியா இன்று, செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆஜரானார். இந்நிலையில் போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை ரியாவைப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இன்று கைது செய்துள்ளது. கஞ்சா கலந்த சிகரெட்டைப் பயன்படுத்தியாக ரியா கூறியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com