சமீபத்தில் வெளியான ஓ மை கடவுளே படம் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் அசோக் செல்வனுக்கும் நல்ல பெயரை வாங்கித் தந்தது. இதன்மூலம் அவருடைய அடுத்த படங்களின் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ள புதிய படத்தில் அசோக் செல்வன் நடிக்கிறார். இவருடைய ஜோடியாக நிஹாரிகா ஒப்பந்தமானார். இவர் ஏற்கெனவே, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்கிற தமிழ்ப் படத்தில் நடித்திருந்தார். ஸ்வாதினி என்கிற புதிய இயக்குநர் இப்படத்தை இயக்கவுள்ளார். இவர், சுசீந்திரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இப்படத்தின் பணிகள் பாடல் ஒலிப்பதிவுடன் தொடங்கப்பட்டுள்ளன. இசை - லியோன் ஜேம்ஸ். இவர்தான் ஓ மை கடவுளே படத்துக்கும் இசையமைத்திருந்தார்.
சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகள் நிஹாரிகாவுக்கு டிசம்பரில் திருமணம் ஆகவுள்ளது. இதுவரை 5 படங்களில் மட்டுமே நடித்துள்ள நிஹாரிகா, சைதன்யா என்கிறவரை திருமணம் செய்யவுள்ளார். பிட்ஸ் பிலானியில் படித்த சைதன்யா, ஹைதரபாத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இதன் காரணமாக இப்படத்தில் நிஹாரிகாவுக்குப் பதிலாக மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இதை இயக்குநர் ஸ்வாதினி உறுதி செய்துள்ளார். அக்டோபர் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. இப்படத்துக்காக டாங்கோ நடனம் கற்றுக்கொள்ளவுள்ளார் மேகா ஆகாஷ்.
படப்பிடிப்பு தொடங்கிய 5-வது மாதத்தில் படம் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் எனப் படத் தயாரிப்பாளர் ஜே. செல்வகுமார் கூறியுள்ளார்.