நடிகர் சங்கத்தைச் சேர்ந்த 1000 உறுப்பினர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இதுதொடர்பாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 23,500 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த 1000 உறுப்பினர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இதுதொடர்பாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நடிகர் சங்கத்தைச் சேர்ந்த 1000 உறுப்பினர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய ரஜினிக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். நிவாரணப் பொருள்களை ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் சாலிகிராமத்தில் உள்ள செந்தில் ஸ்டூடியோ வளாகத்தில் உறுப்பினர்கள் நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.